இப்பதிவில், முளைகட்டிய தானியங்களின் நன்மை பற்றி நாம் அறிந்துகொள்ள முடியும். படித்து பயன் பெறுங்கள்.
முளை கட்டிய தானிய வகைகளில் என்ன சத்து இருக்கிறது? அதை ஏன் சாப்பிட வேண்டும்? உடற்பயிற்சி செய்பவர்கள் மட்டும்தான் இதை சாப்பிட வேண்டுமா? என்று சிலருக்கு கேள்விகள் எழலாம். முளைகட்டிய தானியங்களை சாப்பிடுவதால் என்ன பயன் என்று இப்பதிவில் பார்ப்போம்.
உள்ளடங்கிய துணை தலைப்புகள்:
- முளைகட்டிய தானியங்கள்
- அடங்கியுள்ள சத்துக்கள்
- உட்கொள்ளுவதின் அவசியம்
- உடலிற்கு ஏற்படும் நன்மைகள்
- தானியங்களின் மருத்துவ குணங்கள்
- சாப்பிடும் முறை
முளைகட்டிய தானியங்கள்
உடற்பயிற்சி செய்பவர்கள் காலையில் எழுந்தவுடன் ஊறவைத்த அல்லது சிறிது முளைகட்டிய கொண்டைக்கலையை சாப்பிடுவதை அதிகம் பார்த்திருப்போம் மற்றும் கேள்விப்பட்டிருப்போம். சற்று முளைக்க வைக்கப்பட்டு பயன்படுத்தும் அனைத்து பயறு வகைகளுமே சிறந்த புரத சத்துகளை உடையதாக இருக்கிறது. ஆகவே பயறு வகையை நீரில் ஊற வைத்து, பின்பு முளைக்க வைத்து அதனை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட பரிந்துரைக்க படுகிறது.
உளுத்தம்பயறு, பாசிப்பயறு, தட்டைப்பயறு, கொண்டைக் கடலை, சோயா பயறு இந்த ஐந்து முளை கட்டிய தானியங்களிலும் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. இவைகளை முளைகட்டி பயன்படுத்துவதன் மூலம் உடலிற்கு நல்ல பலன் கிடைக்கும்.
அடங்கியுள்ள சத்துக்கள்
முளை கட்டிய தானிய வகைகளில் புரதம், கார்போஹைட்ரேட், பீட்டா கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளன. சிட்ரஸ் அமிலம் (Citrus Acid) எனப்படும் வைட்டமின் சி மற்றும் ஈ சத்துக்களும், அதிகப்படியான நார்ச்சத்துக்களும் மிகுதியாக காணப்படுகிறது. மேலும் அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.
உட்கொள்ளுவதின் அவசியம்
இன்றைய நாட்களில் நாம் உட்கொள்ளும் திண்பண்டங்கள் ரசாயனங்கள் நிறைந்தவையாக இருக்கிறது. நேரடியாக எண்ணெயில் பொரித்த உணவுகள், சிப்ஸ் வகைகள், செயற்கை நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகள் என இதுபோன்ற திண்பண்டங்களை உட்கொள்ளும் பொழுது நம் உடலின் ஆரோக்கியம் குறைய தொடங்குகின்றது. ஆகவே அதற்கு மாறாக நாம் கட்டாயம் முளைகட்டிய தானியங்களை நன்றாக வேக வைத்து தினமும் 40 முதல் 50 கிராம் வரை காலை உணவோடும், மதிய உணவோடும் எடுத்து கொள்வது நல்லது.
உடலிற்கு ஏற்படும் நன்மைகள்
வீட்டிலேயே செய்யக்கூடிய ஓர் எளிய ஆரோக்கியமான உணவும் கூட. இதனை நாம் தினசரி தவறாமல் உட்கொண்டு வந்தால் உடல் சுறுசுறுப்பு, உடல் உறுதி, புத்திக் கூர்மை, ஞாபக சக்தி அதிகரிப்பு போன்ற நல்ல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கின்றன. மேலும் இளம் வயதிலயே உடல் எடை கூடாமல் இருக்கும் வண்ணமும் நாம் பார்த்துக் கொள்ள முடியும். முக்கியமாக முடி வளர்ச்சி, தோலுக்கு மினுமினுப்பு தருவதோடு கொலஸ்ட்டிராலை சமன்படுத்தும் வேலையையும் முளைகட்டிய தானியங்கள் செய்கின்றன.
தானியங்களின் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள்
முளைகட்டிய கொண்டைக்கடலை:
இரும்புச்சத்து, மாங்கனீசு, சோடியம், துத்தநாகம், செலினியம், தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் நிறைந்து உள்ளன. இது மாரடைப்பு காரணிகளைத் அழிக்கின்றது. ஃபோலிக் அமிலத்துக்கு அடிப்படையான மக்னீசியமும், ஃபோலேட்டும் போதுமான அளவில் உள்ளது.
நார்ச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். இதனை வேகவைத்து சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. இதனால் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது.
முளைகட்டிய உளுந்து:
இதில் அதிக அளவு புரதம், பொட்டாசியம், கால்சியம், நியாசின், இரும்பு, தியாமின், ரிபோஃப்ளேவின், அமினோ அமிலங்களும் நிறைந்து காணப்படுகிறது. நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் சோர்வாக இருக்கும். அவர்கள் வலுப்பெறுவதற்கு உளுந்து உதவுகிறது. இது தசை, நரம்பு மற்றும் எலும்புகளுக்கு ஊட்டமளிக்கிறது. இதனை வேகவைத்து சாப்பிடும்போது உடல் சோர்வு நீங்கி, உற்சாகம் தரும் உணவாக இருக்கிறது.
முளை கட்டிய பாசிப்பயறு:
இதில் புரதம், பொட்டாசியம், நார்ச்சத்து, கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், ஆகியவை அதிகளவில் இருக்கின்றன. கொழுப்பு, மாவுச்சத்து, கோலின், கால்சியம், பீட்டா கரோட்டின், இரும்பு, சோடியம், மெக்னீஷியம், தாமிரம், ஆகியவையும் உள்ளடங்கி இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளலாம். ரத்த ஓட்டத்துக்கும், எலும்பு வளர்ச்சிக்கும், வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றதாக அமைகிறது. இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கும் ஏற்ற உணவு.
மேலும் வைட்டமின் பி மற்றும் ஈ , அமினோ அமிலங்கள், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், அதிகளவில் உள்ளது. சீரான ரத்த ஓட்டத்துக்கும், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் ஏற்ற உணவாகும். பெருங்குடல் தொந்தரவுகளைத் தீர்த்து, மலச்சிக்கலைப் போக்குகிறது.
முளைகட்டிய தட்டை பயறு:
வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம், ஃப்ளேவனாய்டுகள் மற்றும் ஆன்ட்டி-ஆக்சிடென்ட்டுகள் போன்ற கனிமங்கள் மற்றும் கரையா நார்ச்சத்து அதிகம் அடங்கியிருக்கிறது. இத்துடன் அதிக அளவு நார்ச்சத்தும், புரதமும் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னைகள் நீங்கி, செரிமான கோளாறுகளுக்கு சிறந்த உணவாக அமைகிறது.
முளைகட்டிய சோயா பயறு:
இதில், புரதம், இரும்பு , ஃபோலிக் ஆசிட், , கால்சியம், பாஸ்பரஸ், ஒமேகா 3 வகை கொழுப்பு, மாவுச்சத்து, பீட்டா கரோட்டின், தயாமின், ரிபோஃபோமின், துத்தநாகம், மெக்னீசியம், தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் புற்றுநோயை வராமல் தடுக்கும் மூலக்கூறுகள் உள்ளது. ஹார்மோன் பிரச்னைகளுக்கு உள்ளான பெண்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
குறிப்பு: முளைகட்டிய சோயாவை நேரடியாக எடுத்துக் கொள்ளும்போது அஜீரண தொந்தரவுகள் இருக்கும். ஆகவே இதனை நன்றாக ஊற வைத்து சமைத்து சாப்பிடுவது நல்லது.
சாப்பிடும் முறை
முளைகட்டிய தானியங்களை வேக வைக்காமல் நேரடியாக சாப்பிட்டால் சில சமயங்களில் வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே சற்று வேக வைத்து சாப்பிடுதல் நல்லது.
முளைகட்டிய தானியங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்ல பலனை தரும். மலை வேளையிலும் சாப்பிடலாம்.