தினம் ஓர் மூலிகை – அதிமதுரம்

இப்பதிவில், அதிமதுரம் எனும் மூலிகையை பற்றி நாம் அறிந்துகொள்ள முடியும். படித்து பயன் பெறுங்கள்.

உலகில் அனைத்து மருத்துவ முறைகளில் பங்கு வகிப்பதோடு, ஆயுர்வேத மருத்துவ முறையில் முக்கிய பங்கு வகிக்கும் அதிமதுரம் எனும் மூலிகையின் தன்மை மற்றும் மருத்துவ குணங்களை பற்றி இப்பதிவில் நாம் அறிந்து கொள்ள முடியும்.

உள்ளடங்கிய துணை தலைப்புகள்:

  • அதிமதுரம்
  • வளரியல்பு
  • தாவர விளக்கம்
  • மருத்துவ பயன்கள்
  • மருத்துவ முறைகள்

அதிமதுரம்

Tamil medicine athimathuram Licorice health benefits

“குன்றிமணி” என்னும் செடியின் வேர் பகுதியே “அதிமதுரம்” ஆகும். இது ஆங்கிலத்தில் “லிகோரிஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது அனைத்து மருத்துவ முறைகளிலும் உபயோகப் படுத்தப்படுகிறது. அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வளரியல்பு

இது ஒரு செடியாக வளரக்கூடியது. காடுகளில் புதர்ச்செடியாகவும் வளரும் தன்மை கொண்டது.

தாவர விளக்கம்

இது இயற்கையாக மலைப்பிரதேச பகுதிகளில் விளைகின்றது. சுமார் 1 1/2 அடி உயரமாக வளரும். இலைகள் கூட்டிலையானவை. ஊதா நிறமான சிறு பூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும். காய்கள் 3 செ.மீ. வரை நீளமானவை. சிறு முட்களுடன் காணப்படும். வேர்கள் கிளைத்தவை. சிறியதும் பெரியதுமாக, உட்புறம் மஞ்சள் நிறமாக, வெளிப்புறம் அடர்த்தியான பழுப்பு நிறமாக காணப்படும். வேர்களே மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகின்றன. மேலும், இவை பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் வாணிப ரீதியாக பயிரிடப்படுகிறது. அதிங்கம், அஷ்டி, மதூகம், இரட்டிப்பு மதுரம் ஆகிய மாற்று பெயர்களும் அதிமதிரத்திற்கு உண்டு. அதிமதுரம் நாட்டு மருந்து கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும்.

மருத்துவ பயன்கள்

இலைகள் இனிப்பு சுவையும் வெப்ப தன்மையும் கொண்டவை. வேர்கள் இனிப்பு சுவையும் குளிர்ச்சி தன்மையும் கொண்டவை. வேர் பகுதியானது புண்கள், தாகம், அசதி, கண் நோய்கள், விக்கல், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், தலை நோய்கள் ஆகியவற்றை குணமாக்கும். காக்கை வலிப்பு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், படர்தாமரை ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். முடியை வளர்க்கும் பண்பும், ஆண்மையை பெருக்கும் குணமும் கூட அதிமதிரத்திற்கு உண்டு. ஆயுளையும் அதிகரிக்க செய்யும்.

மருத்துவ முறைகள்

குறிப்பு: கீழ்வரும் பகுதியில் அதிமதுரம் என குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே அதிமதுரத்தின் காய்ந்த வேர்பகுதியே ஆகும்.

இருமல் கட்டுப்பட:

அதிமதுரம் 50 கிராம், மிளகு 10 கிராம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, இளவறுப்பாக வறுத்து, தூள் செய்து கலந்து வைத்து கொண்டு, 1 தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்து சாப்பிட்டுவர வேண்டும். வறட்டு இருமல் சிறிதளவு அதிமதுரத்தை வாயிலிட்டு ஊறவைத்து மென்றும் சாப்பிடலாம்.

வயிற்றுப்புண் குணமாக:

50 கிராம் அதிமதுரத்தை இலேசாக இடித்து, 1.5 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 1/4 லிட்டர் ஆகக் குறையும் வரை காய்ச்சி, அத்துடன் 150 கிராம் சர்க்கரை, 1/4 லிட்டர் பால் ஆகியவை சேர்த்து, பாகுபதம் வரை காய்ச்சி வடிக்க வேண்டும். சூடு ஆறிய பின்னர் கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்த வேண்டும். இதில், 2 தேக்கரண்டி அளவு, 1/2 டம்ளர் வெந்நீரில் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் 2 வாரங்கள் உணவுக்கு பின்னர் சாப்பிட்டு வர வேண்டும்.

காயங்கள் மற்றும் வெட்டுக்காயங்கள் குணமாக:

தேவையான அளவு அதிமதுரத்தூளை நெய் சேர்த்து, பச்சையாகக் குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில பூசவேண்டும்.

நரம்பு தளர்ச்சி கட்டுப்பட:

1/2 தேக்கரண்டி அதிமதுர பொடியை, சிறிதளவு தேனுடன் குழைத்து, காலை மாலை வேளைகளில் 48 நாட்கள் வரை சாப்பிட்டுவர வேண்டும்.

தலைவலி, ஒற்றை தலைவலி குணமாக:

அதிமதுரம், பெருஞ்சீரகம், சர்க்கரை சம அளவாக எடுத்துக்கொண்டு நன்றாக தூள் செய்துகொள்ள வேண்டும். இதனை, முதலுதவி மருந்தாக, 1 தேக்கரண்டி அளவு, சிறிது வெந்நீருடன் சேர்த்து உள்ளுக்கு சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *