இப்பதிவில், சமைலறையின் அஞ்சறை பெட்டியை பற்றி நாம் அறிந்துகொள்ள முடியும். படித்து பயன் பெறுங்கள்.
கடுகு, சீரகம், மிளகு, மஞ்சள், வெந்தயம், பெருங்காயம், கிராம்பு ஆகியவற்றைக் கொண்ட அஞ்சறைப் பெட்டியின் மருத்துவ குணங்களையும், பயன்படுத்தும் முறைகளையும் இப்பதிவில் பார்ப்போம்.
உள்ளடங்கிய துணை தலைப்புகள்:
- அஞ்சறைப் பெட்டி
- முதலுதவி பெட்டி
- அஞ்சறைப் பெட்டியின் மகிமை
அஞ்சறைப் பெட்டி
நம் முன்னோர்கள் நமக்கு குடுத்த நோயில்லா வாழ்வியல் முறையில் முக்கிய இடம் பிடிப்பது, நம் சமையல் அறையை அலங்கரித்து கொண்டிருக்கும் அஞ்சறைப் பெட்டியே! அஞ்சறைப் பெட்டியை செல்லமாக சொல்ல வேண்டுமென்றால் வீட்டில் உள்ள முதலுதவி பெட்டி என்று சொல்லலாம்.
“அப்படியென்ன அதிலிருக்கிறது, வெறும் சமையல் சம்பத்தப்பட்ட விஷயம்தானே உள்ளே இருக்கிறது!” என்று நினைப்பவர்களுக்கு, இது ஒரு நல்ல பயனுள்ள பதிவாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
முதலுதவி பெட்டி
பெட்டியினுள் சமையலுக்கென்று அடைத்து வைக்கப்பட்ட கடுகு, சீரகம், மிளகு, மஞ்சள், வெந்தயம், பெருங்காயம், கிராம்பு போன்றவை எப்படி மருந்தாக பயன்படுகிறது என்பதை பற்றி சற்று பார்ப்போம்.
மிளகு:
வைட்டமின்- பி, ஈ மற்றும் பைப்பரின் போன்ற சத்துக்களைக் கொண்டுள்ளதால் நம் உடலில் உள்ள வாத, பித்தம், கபம் என்று சொல்லக்கூடிய மூன்று கூறுகளையும் சமநிலையில் வைக்க பெரிதும் உதவுகிறது.
உடலில் உள்ள நச்சுக்களை முறிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. பசியின்மை பிரச்சனையை அகற்றும் திறன் கொண்டது.
சீரகம்:
சீரகம் என்பது சீர்+அகம் = சீரகம். இதில் வைட்டமின்-பி, இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளதால் நம் வயிற்றில் உள்ள வாயுக்களை களைவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதன் இனிப்பு மற்றும் கார்ப்பு தன்மை உடம்பை குளிர்வித்து, செரிமானத்துக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. சீரகத்தை பொடி செய்து வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெப்டிக் அல்ஸர் குணமடையும். சீரகத்தை நாட்டுச்சர்க்கரையுடன் கலந்து உண்டுவந்தால் தேகம் வன்மை பெறும்.
வெந்தயம்:
இயற்கையில் நன்கு பக்குவப் படுத்தப்பட்டுள்ள இரும்புச்சத்து வெந்தயத்தில் அதிகம் உள்ளது.
நம் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவையும், இரும்புச்சத்தின் அளவையும் தக்கவைத்து, ரத்தத்தை சுத்திகரிக்க செய்கிறது. நம் பித்தத்தை தனித்து உடற்சூட்டைக் குறைத்து நல்ல தூக்கத்தை உண்டாக்கும். நன்கு முளைகட்டிய வெந்தயதை சாப்பிட்டு வந்தால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த பலனைத் தரும்.
பெருங்காயம்:
கைப்பு, கரகரப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. இது ஒரு பிசின் வகையைச் சேர்ந்தது. நரம்புகளை பலப்படுத்துவதில் சிறப்புடையது.
மூட்டுகளின் இணைப்புகளில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பல் தொடர்பான பிரச்சனை மற்றும் நோய்கள் வராமல் தடுக்கின்றன.
மஞ்சள்:
இது வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி என்கிற ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள பொருளாகும்.
உலகளவில் வைரஸுக்கு எதிராக செயல்படும் மருந்து பொருளாக நிரூபணம் ஆகியுள்ளது. சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை உடலில் உருவாக்கிடவும், நோய்களில் இருந்து பாதுகாக்கவும் மஞ்சள் உதவுகின்றன. இதில் உள்ள உட்பொருள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
அஞ்சறைப் பெட்டியின் மகிமை
அனைத்து நோய்களுக்கும் அடிப்படையான காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே! இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை அஞ்சறைப்பெட்டியின் துணைகொண்டு சரியான முறையில் கையாண்டால் நோயற்ற வாழ்க்கை அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை!